Thursday, October 20, 2011

திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வெற்றி

திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மரியம் பிச்சை மறைவையடுத்து அங்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை திருச்சி சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. மொத்தம் 18 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில், 11வது சுற்று தவிர மற்ற அனைத்து சுற்றிலும் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதியே முன்னிலை வகித்தார். 11வது சுற்றில் கே.என். நேரு 219 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி 68 ஆயிரத்து 804 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 196 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 608 ஓட்டுகள் அதிகம் பெற்று பரஞ்சோதி வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Thursday, September 29, 2011

திருச்சி (மே) தொகுதி தேர்தல் அ.தி.மு.க பிரச்சாரம்

திருச்சி: திருச்சி இடைத்தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் விதமாக, அ.தி.மு.க.,வினர் "அனல்' பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அக்., 13ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.,வில் வேட்பாளராக பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவுக்கோரி பிரசாரத்தை துவங்கிவிட்டார். அ.தி.மு.க.,வில் 15 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட தேர்தல்பணிக்குழு அமைக்கப்பட்ட பின்னர், வேட்பாளரும், தொண்டர்களும் அதிகபட்ச உற்சாகமாக பணியாற்றுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி நேற்று உறையூர் பகுதியில் ஓட்டு வேட்டையாடினார். வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து "தனக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். வேட்பாளருடன், அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார், மாவட்ட ஜெ., பேரவைச்செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். "அனல்' பிரச்சாரம்: திருச்சியில் காலை நேரத்தில் கடுமையான வெயில், இரவு நேரத்தில் மழை என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, வியர்வை சொட்ட, வேட்பாளர் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரிக்கிறார். அவருடன் செல்லும் தொண்டர்கள், ஓட்டு சேகரிக்கும் விதமாக, மக்களிடம் "அனல்' பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Sunday, May 22, 2011

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு

சென்னை : தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ.,வான செ.கு. தமிழரசன் இன்று காலை ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழரசன் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாளை காலை தற்காலிக சபாநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே மாதம் 27ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றபின் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசும் போது, இந்திய குடியரசு கட்சியைத் தான் முதலில் அழைத்து சீட் ஒதுக்கினார்.கடந்த 1991ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் பொன்னம்மாளை தற்காலிக சபாநாயகராக நியமித்தார். அதேபோல், 2001ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்தார்.வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த என்னை நியமித்துள்ளார். அவருக்கு எனது நன்றி. அவர், தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவார்.இவ்வாறு தமிழரசன் கூறினார்.

மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா

டெல்லி: திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும்.

வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் மயமாகிப் போய் விட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

ஊழலுக்கெல்லாம் தாய் என்ற பெருமையை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தட்டிக் கொண்டு போய் விட்டது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதில் பாலிட்டிக்ஸ் செய்து பாயாஸம் சாப்பிடப் பார்த்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக குட்டியதைத் தொடர்ந்து சிபிஐயை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மிக மிக தாமதமாக தொடங்கிய இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் அரசியல் புகுந்து விளையாடியது. ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து திமுகவிடம் பேரம் பேசி ஏகப்பட்ட சீட்களை வாங்கியது காங்கிரஸ் என்று தேர்தலின்போது குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இப்படி தொட்டதெல்லாம் ஊழல், தொடர்வதெல்லாம் ஊழல் என்று காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி ஆட்சிக்கும் ஊழல் பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்தது.

இதை விட மோசமான கெட்ட பெயர் எதுவென்றால், ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலையை, காந்தி, புத்தர் போன்ற அகிம்சாவாதிகளைக் கொடுத்த இந்தியா, அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து ரசித்த செயல்தான்.

பல ஆயிரம் அப்பாவி மக்களை சிங்கள அரசும், அதன் ஏவல் படைகளான ராணுவமும் குத்திக் குதறிக் கூறு போட்டபோது மன்மோகன் சிங் அரசை நோக்கி உலகெங்கும் இருந்து கூப்பாடு போட்டு கெஞ்சிக் கேட்டனர் தமிழ் மக்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர்கள் போட்ட கூச்சல் மன்மோகன் சிங்கின் காதுகளிலும் விழவில்லை. அவரை இயக்கி வரும் சோனியா காந்தியின் காதுகளிலிலும் விழவில்லை.

எல்லாம் முடிந்து ஈழமே இழவு வீடாகிப் போன பின்னரும் கூட அங்குள்ள மக்களை கரை சேர்க்க, கை தூக்கி விட இந்திய அரசு தயாராக இல்லை.

ஈழத்தில் சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சிதிலமாக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அத்தனை தமிழர்களின் ரத்தமும் மனமோகன் சிங் அரசின் மீது படிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தில் ரத்த ஆறு ஓடியதைத் தடுத்திருக்கலாம். அத்தனை அப்பாவிகளின் உயிர்களையும் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மன்மோகன் சிங் அரசு அதைச் செய்யாமல் போனது ஈழத்துத் தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ் உலகும் பெரும் வேதனையில் ஆழ்ந்தது என்பது உண்மை. இந்த உண்மையைத்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு மூலம் காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டது.

79 வயதாகும் மன்மோகன் சிங், நேருவுக்குப் பிறகு அதிக ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றாலும் கூட இத்தனைகாலமாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன்னை நோக்கி வீசப்பட்ட ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட எதற்குமே இதுவரை உருப்படியாக பதிலளித்ததில்லை. மெளனச் சாமியாராக மட்டுமே அவர் காட்சி தந்து வருகிறார்.

முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட இந்த ஆட்சியில்தான் ஊழல் மலிந்து நாறிப் போய் விட்டது. இதற்கும் இதுவரை உருப்படியான விளக்கத்தை மன்மோகன் சிங்கோ அல்லது அவரது தலைவியான சோனியா காந்தியோ கொடுத்ததில்லை.

மன்மோகன் சிங் அரசின் சாதனை என இந்த ஆட்சிக்காலத்தில் பெரிதாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கோட்டையைத் தகர்த்த பெருமை கூட காங்கிரஸுக்குக் கிடையாது. திரினமூல் காங்கிரஸுக்குத்தான் அந்த முழுப் பெருமையும். தமிழகத்தில் ஐந்து எம்.எல்.ஏக்களுடன் அசிங்கப்பட்டு நிற்கிறது. கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட நித்தியகண்டம் பூரணாயுசு கதைதான்.

கர்நாடகத்தில் கவர்னர் மூலம் என்னென்னவோ செய்து பார்த்தும் பாஜக அரசை அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி இல்லாத பாலிட்டிக்ஸையெல்லாம் செய்தும் இதுவரை பெரிதாக எதையும் சாதித்ததாக தெரியவில்லை. பீகாரில் ராகுல் காந்தியின் பார்முலா மகா மோசமாக மண்ணைக் கவ்வியதை நாடு பார்த்தது.

விலைவாசி உயர்வு, இஷ்டத்திற்கு ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல் விலை உயர்வு என்று மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளத் தீர்க்க ஒரு அருமையான திட்டத்தை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை.

ஆட்சியைப் பிடித்தபோது இருந்த செல்வாக்கை விட பல சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது காங்கிரஸ் கட்சி என்ற சர்வேக்ககள் கூறுகின்றன. அதை அறிய சர்வே தேவையில்லை. மக்கள் முகங்களைப் பார்த்தாலே போதும், இந்த ஆட்சியின் அவலத்தைப் புரிந்து கொள்ள

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: கொடநாட்டில் கிடா வெட்டி விருந்து

கோத்தகிரி: சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் பொருட்டு நேற்று கொடநாட்டில் கிடா வெட்டு நடந்தது.

சிறப்பு பூஜை

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கோடநாடு எஸ்டேட்டில் கிடா வெட்டு நடந்தது. எஸ்டேட்டில் உள்ள அம்மன் கோவிலில் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கிடா வெட்டப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள், உள்ளூர் அதிமுகவினர், சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்து

பூஜைகள் முடிந்ததும் தொழிலாளர்களுக்கும், கட்சியினருக்கும் பிரம்மாண்டமான விருந்து நடந்தது.

Saturday, May 21, 2011

தாலிக்குத் தங்கம் பெற தேவையான தகுதிகள்-அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய தேவைப்படும் 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பெற தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பபடித்த ஏழைப் பெண்கள் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் ஆகிய உறுதிமொழியை அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்பித்தார் ஜெயலலிதா.

தற்போது இதற்கான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விவரம்...

- படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

- திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

- இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.

- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது.

எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. தங்கத்தை மொத்தமாக ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்வதா அல்லது டெண்டர் மூலம் வாங்குவதா என்று பலவழிகளிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

கனிமொழியின் வாழ்க்கை! சிறையில் முடங்கியது

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த வசதியும் இல்லாத அறை அது.

43 வயதான கனிமொழியின் சிறை வாழ்க்கை குறித்த ஒரு பார்வை...

நேற்று மாலை திஹார் சிறைக்கு கனிமொழி கொண்டு செல்லப்பட்டார். கண்கலங்கிய நிலையில் பாட்டியாலா கோர்ட் லாக்கப்பிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது அவர் மீண்டும் கலங்கினார்.

வேனில் அவருக்குப் பாதுகாப்பாக வந்த திஹார் சிறைக் காவலர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் கனிமொழியுடன் தமிழில் பேசவே சற்று ஆறுதலடைந்தார் கனிமொழி. அவர்களுடன் தமிழில் உரையாடியபடி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எந்த ஊர், எப்போது முதல் இங்கு பணியாற்றுகிறீர்கள், டெல்லியில் வேலை எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டுக் கொண்டே வந்தாராம் கனிமொழி.

சிறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு சிறை விதிமுறைகள் விளக்கிச் சொல்லப்பட்டது. அதை அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்னர் சிறை விதிமுறைகளின்படி சில ஆபரணங்களை அவர் கழற்றிக் கொடுத்து விட்டார். அவரது முகத்திற்கு அழகூட்டும் மூக்குத்தியும் அதில் ஒன்று.

மூக்குக் கண்ணாடி, சிறிய கைப்பை, சில புத்தகங்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை சிறைக் காவலர்கள் 8ம் எண் அறைக்குக் கொண்டு சென்று விட்டனர். அது மிகச் சிறிய அறை. அந்த அறையில் ஒரு கழிப்பறை மற்றும் படுத்துத் தூங்குதவற்காக ஒரு சிறிய மேடை போன்ற இடம் ஆகியவை மட்டும் உள்ளன.

கனிமொழியின் கண்ணியத்தைப் பாராட்டிய சிபிஐ நீதிபதி அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், மின்விசிறி சலுகை தரலாம் என சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதன்படி கனிமொழி டிவி, செய்தித் தாள்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்குள்தான் தனது சிறை வாழ்க்கையை கழித்தாக வேண்டும் கனிமொழி. இங்கேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு குளித்துக் கொள்ளலாம். கழிப்பறை உள்ள பகுதியில்தான் அவர் குளிக்க வேண்டும். அதற்கும், தூங்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு ஏதும் கிடையாது. துணியால் மறைத்தபடி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.

கனிமொழி தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட நீதிபதி அனுமதித்துள்ளார். மருந்துகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான சாப்பாட்டை சாப்பிட கனிமொழிக்கு தடை இல்லை.

இருப்பினும் இவை தவிரகனிமொழிக்கென்று வேறு எந்த சிறப்புச் சலுகையும் தரப்பட மாட்டாது. வழக்கமான கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுவார் என்று சிறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி விஐபி கைதி என்பதால் அவரைத் தாக்கி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள சிலர் முயலலாம் என்பதால் அது நடந்து விடாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அறைக்கு முன்பு 24 மணி நேர பாதுகாப்பு தரப்படும் என்றும், கனிமொழியுடன் ஒரு பாதுகாவலர் எப்போதும் இருப்பார் என்றும் குப்தா கூறியுள்ளார்.

தனது அறை உள்ள பகுதியையொட்டியுள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் கனிமொழி பேசத் தடை இல்லை. அதேசமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேச அவருக்கு அனுமதி கிடையாது.

கனிமொழி விசாரணைக் கைதி என்பதால் அவர் வழக்கமான உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் இரவை கனிமொழி நல்ல தூக்கத்தின் மூலம் கழித்தாராம். இரவு 11 மணிக்குத் தூங்கிய கனிமொழி காலை ஐந்தரை மணியளவில் எழுந்துள்ளார். கோர்ட்டுக்குக் கிளம்ப தயாரானார்.

நேற்று இரவும், இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவையே சாப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைக்கும் வரை இந்த குறுகிய அறைக்குள்தான் கனிமொழி தங்கியிருக்க வேண்டும்.

Friday, May 20, 2011

கனிமொழி கைது: கருணாநிதி கருத்து

சென்னை: “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

print