Monday, April 11, 2011

ரூ.5 கோடி பதுக்கல்?!: தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட காங்கிரசார்

சென்னை & காஞ்சிபுரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மைலாப்பூர் தொகுதி வேட்பாளருமான கே.வி.தங்கபாலுவின் வீட்டில் ரூ.5 கோடி பதுக்கி வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரது வீட்டு முன் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று திடீர் முற்றுகை போராட்டம் நடந்தது.

மைலாப்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தங்கபாலு பணம் பட்டுப் வாடா செய்து வருகிறார் என்று தேர்தல் கமிஷனிடம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஜயசேகர் புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தங்கபாலு வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதற்காக ரூ.5 கோடி பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி விஜயசேகர் மற்றும் கவுன்சிலர் சாந்தி ஆகியோர் தலைமையில் சுமார் 500 பேர் அடையாறு கஸ்தூரி பாய் நகரில் உள்ள தங்கபாலு வீட்டை இன்று பகல் 12 மணி அளவில் முற்றுகையிட்டனர்.

அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் ரூ.5 கோடியை தேர்தல் கமிஷன் சோதனை நடத்தி பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

இச்சம்பவத்தால் அடையாறு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கபாலு கண் எதிரே கொடுபாவியை எரித்த காங்கிரஸார்:

முன்னதாக நேற்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த தங்கபாலுவின் கண் எதிரிலேயே அவரது கொடும்பாவியை எரித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் ஆசி பெற்ற தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது,

காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆசியுள்ள எங்கள் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கருணாநிதி 6வது முறையாக தமிழக முதல்வர் ஆவார். எங்கள் கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெறும் என்றார். அவருடன் காஞ்சி நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.குப்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் சங்கர மடத்திலிருந்து வெளியே வந்தபோது காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், மாநில பட்டு நலவாரிய உறுப்பினருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார் சங்கரமடம் அருகே திரண்டனர். அவர்கள் தங்கபாலுவின் கண் எதிரே அவரது கொடும்பாவியை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் தங்கபாலு கார் அருகே செருப்பு மாலையை தூக்கி வீசினார். இதையடுத்து தங்கபாலு அந்த இடத்தைவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.

இது குறித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆர்.வி.ரஞ்சித்குமார் கூறியதாவது,

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தன்னுடைய சுயலாபத்திற்காக கட்சியை அடமானம் வைத்து விட்டார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வங்கியுள்ள வன்னியர்களுக்கு அதிகமாக இடஒதுக்கீடு செய்யவில்லை. பிராமணர்கள் அதிகமுள்ள மைலாப்பூரில் போட்டியிட்டு அவர்களின் வாக்குகளை பெற்று தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக அனுதாபியான சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற்று காங்கிரஸை அடமானம் வைத்து விட்டார். இதை கண்டித்து தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

No comments:

print