Saturday, April 30, 2011

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? - கருணாநிதி பதில்

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன் ஹெட்லைன் டுடே டி.வி.-இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந் நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தெரியவந்துள்ளதாக அதே தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து தொலைக்காட்சிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சமீபத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பொதுவாக நான் கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால், தொடர்ந்து அடுத்தடுத்து இந்தப் பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

கேள்வி: இதிலே எந்தெந்த விஷயங்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின்பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்திருக்கின்றது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது.

கூட்டணி அமைச்சரவையா?:

கேள்வி: உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?, கூட்டணி அமைச்சரவை தான் அமையுமென்று நினைக்கிறீர்களா?

பதில்: சூழ்நிலைக்கேற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல, கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கிறது.

கேள்வி: தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகளைச் சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்களே கேட்கும் போது அவையெல்லாம் அவதூறுகள் என்று சொல்லி கேட்டிருக்கிறீர்கள், அது அவதூறுகள் தான்.

சட்டரீதியாக சந்திப்போம்:

கேள்வி: மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள்தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?

பதில்: வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாகச் சந்திப்போம்.

கேள்வி: மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: இங்கே மேலே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள். "வாய்மையே வெல்லும்''. அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி?:

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதல்வராக தொடர்வீர்களா?, அல்லது ஸ்டாலின் முதல்வராவாரா?

பதில்: அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.

கேள்வி: உங்களுடைய ஆசை என்ன?

பதில்: மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

No comments:

print