Saturday, April 2, 2011

விஜயகாந்த்தால் தேர்தல் கணிப்புகள் பொய்யாகும்-பாஜக

தஞ்சாவூர்: விஜயகாந்த்தின் நடவடிக்கைகளால் தமிழக தேர்தல் கணிப்புகள் எல்லாமே பொய்யாகும் என்று பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.


தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியது கண்டிக்கத்தக்கது. கட்சியின் தலைவராக இருக்கும் விஜயகாந்த் பொதுஇடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அதிமுக கூட்டணியில் ஆத்மார்த்தமான உணர்வும் உறவும் அமையவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலலிதா ஒரு முறை கூட விஜயகாந்த் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கவில்லை. முரண்பாடான கொள்கைகளில் ஒட்டு மொத்த வடிவமாக அதிமுக கூட்டணி உள்ளது. ஆகையால் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது.

விஜயகாந்த்தின் இது போன்ற நடவடிக்கைகளால் தமிழக தேர்தல் கணிப்புகள் எல்லாமே பொய்யாகும்.

சட்டசபை தேர்தலில் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும், பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்றார்.

அதிமுக அணி இன்னும் வடிவம் பெறவில்லை-திருமாவளவன்:

இந் நிலையில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் 5 ஆண்டு கால சாதனை மக்கள் மனதில் நல்ல நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாமகவும் முதல் முறையாக ஒரே கூட்டணியில போட்டியிடுகிறோம். கடந்த கால கசப்பை மறந்து ஒற்றுமையுடன் களப்பணி செய்து நூறு சதவீதம் வெற்றி பெறுவோம்.

அதிமுக அணி இன்னும் வடிவம் பெறவில்லை. ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதும் இல்லை. ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் சந்தேகப்படுகிறார்கள். விஜயகாந்த் கூறும்போது கூட எம்ஜிஆர் தொடங்கிய கட்சியுடன்தான் கூட்டணி என்கிறார். அவரது தனி நபர் மதிப்பு குறைந்து வருகிறது.

பொது இடத்தில் வேட்பாளரை அடித்ததால் அவருடைய நாகரீகமும், பண்பும் அம்பலமாகியுள்ளது என்றார்.

No comments:

print