Monday, April 25, 2011

இலங்கை தமிழர்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்! -கருணாநிதி

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியது நானல்ல, ஜெயலலிதாதான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்''-ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? 'சாட்சாத்' ஜெயலலிதாதான். எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு. பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கை தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.

யாரை மன்னிப்பு கேட்க சொல்கிறார் ஜெயலலிதா?

திமுக நடத்திய போராட்டங்கள்...

1956-ம் ஆண்டிலே சிதம்பரம் தி.மு.க. பொதுக்குழுவிலே அண்ணாவின் முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் ஜெயலலிதா பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

24.8.1977 அன்று சென்னையிலே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஐந்து லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணியை நடத்தியவன் நான்.

1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆம் ஆகஸ்ட் 13-ம் தேதியன்றே-'கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வடகொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்படுகின்றன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்'' என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த இந்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

சிறைக்குப் போனேன்....

அதே 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் அன்றிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகத் தலைநகரிலே 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10.8.1983 அன்று நானும், கழக பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.

16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

டெசோ மாநாடு

23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று நான் அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களிடையே சகோதர யுத்தம் கூடாதென்பதற்காகவும், 1986-ம் ஆண்டு மே திங்களில் மதுரையில் பொதுச்செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட 'டெசோ' அமைப்பின் சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்திய இந்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்காக பகிர்ந்து கொடுத்தவன் நான்.

1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. சார்பில் பேரணி நடத்தினோம்.

16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை விடுத்தவன் நான்.

ஆட்சியையே இழந்தேன்...

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான் தான்.

6.11.1987 அன்று சென்னையில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியை நடத்தியவனும் நான்தான்.

15.3.1989 அன்று டெல்லியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்தவனும் நான்தான்.

15.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து பேசியவனும் நான் தான்.

1991-ம் அண்டு ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டபோது, முதல்வராக இருந்ததே நான்தான்.

ஜெயலலிதா என்ன சொன்னார்?

1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் தற்போது என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிற ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?

"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி விட்டார்கள்'' என்று அறிக்கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார்.

5.11.1989 அன்றும் 6.11.1989 அன்றும் தமிழ்நாட்டில் பேசிய ராஜீவ்காந்தி, "இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் தி.மு.க. அரசுக்கும் முதல்வர் மு.கருணாநிதிக்கும் நன்றி'' என்று கூறினார். இவ்வாறு இளந் தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

23.4.2008 அன்று தமிழக சட்டப்பேரவையில்- 'இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென இப்பேரவை வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

கைது செய்ய வேண்டும்

6.10.2008 அன்று காலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு-புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம். சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

'இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது' என்று தமிழக சட்டப்பேரவையில் 16.4.2002 அன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னைப் பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.

வெட்கக் கேடு

இலங்கையில் ராஜபக்சேயின் சிங்கள படையினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தபோது, அதனை கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, 'இலங்கை தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம்-ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம்-போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கை தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்' என்று 17.1.2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது-இதே ஜெயலலிதாதான் 'விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை' என்று கூறியதோடு - இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார் என்றும் அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை; இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற சில ஏடுகளே வெளியிட்டனவே!

ஜெயலலிதாவுக்கு தகுதி உண்டா...

இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில்-எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும்-அந்த கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவர்தானா?

தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அதனையும் 'கபட நாடகம்' என்றுதான் வர்ணித்தார்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும்-நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கை நழுவ விடுவதும்-பதவியிலே இருக்கும் போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும்-யாரையும், எவரையும் மதிக்காமல் தன்னை மீறி எதுவுமில்லை என்ற ஆணவப்போக்கோடு நடப்பதும் ஜெயலலிதா போன்ற 'கபட வேடதாரி'களுக்குத்தான் கைவந்த கலையே தவிர-உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதை என்பனவற்றை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்.

-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

print