Saturday, April 16, 2011

ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு நடத்தப்படுமா?


சென்னை : ரஜினிகாந்த் வாக்களித்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படுமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும், என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் பிரவீண் குமார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் வாக்களித்ததை பத்திரிகை, தொலைக்காட்சி புகைப்படக்காரர்கள் படமாக்கி, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பியது குறித்துக் கேட்டனர்.

மேலும் வாக்காளரின் தனிமை மற்றும் ரகசியம் காக்கப்படாதது, தேர்தல் ஆணையத்தின் தவறுதானே. என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரவீண்குமார் கூறியதாவது:

"சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக எங்களுக்குப் புகார் வந்தது. உடனே அது சட்டப்படி தண்டனைக்குரியது நாங்கள் எச்சரித்தோம்.

இதற்கிடையே அந்த வாக்குச்சாவடியில் நாங்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளையும், தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோவையும் நாங்கள் பார்த்தோம். உண்மையில் அவர் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதுதொடர்பாக தேர்தல் பார்வையாளரும் எந்த புகாரும் கூறவில்லை. இருந்தாலும், அந்த வீடியோ பதிவை நாங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி மத்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

புகார் வரவில்லையே...

ரஜினிகாந்தின் தனிமை மற்றும் ரகசியம் பாதிக்கப்பட்டதாக புகார் வருமானால் அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். ஆனால் அனைத்தும் சரியாகவே நடந்திருப்பதாக தேர்தல் பார்வையாளர் அறிக்கை தந்திருக்கிறார். எங்களுக்கு எந்தப் புகாரும் வரவும் இல்லை. எனவே இதில் குற்றம்சாட்ட வேண்டிய அவசியம் இல்லை", என்றார்.

ஆனால் நெல்லை மாவட்டம் புளியம்பட்டி எனும் ஊரில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் வெளியில் தெரிந்ததால் அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

print