Thursday, April 7, 2011

சட்டசபை தேர்தலில் காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி: சீமான்

கரூர்: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் தான் தமிழினத்தின் எழுச்சி உள்ளது என்று இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.


கரூரில் நடந்த நாம் தமிழர் இயக்க பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது,

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எல்லாம் இலங்கை அரசும், இந்தியாவின் ஆதரவும் தான் காரணம். தமிழர்களுக்கு மான, இன உணர்வுகள் இருப்பது உண்மை என்றால் கரூரில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும். இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அக்கட்சியில் இருந்து விலகி, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு காரணமான காங்கிரஸை கேள்வி கேட்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8 மணி நேர மின் வெட்டால் விவசாயமும், தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. நடப்பதற்கு சரியான பாதை கூட இல்லாத நிலையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக பொய் சொல்கின்றனர்.

ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்டது. தமிழனால் அதற்கு கூட உழைக்க முடியாது என்று அதையும் இலவசமாக வழங்குகிறோம் என்று அரசியல் கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அளவிற்கு தமிழனின் தன்மானம் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை காவல் துறை கட்டுப்படுத்துகிறது. காவல் துறை இதேபோன்று நடந்தால் நாடு சிறப்பாக இருக்கும். இது வரை தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்கும் ஆணையமாக இருந்த தேர்தல் ஆணையம் தற்போது தான் தேர்தலை நடத்தும் ஆணையமாக மாறியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் சீனர்களால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து உள்ளது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணிப் பாருங்கள். காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் தான் தமிழ் இனத்தின் எழுச்சி இருப்பதால், தேச துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்றார்.

No comments:

print