Thursday, May 5, 2011

வாக்கு எண்ணும் இடங்களில் 100 மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல தடை!

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது. இந்த பகுதியில் வருபவர்கள் அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அடையாள அட்டை இல்லாவிட்டால் 100 மீட்டருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.

சென்னை மாநகராட்சியில் இன்று சென்னை, வேலூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்த பின் நிருபர்களிடம் பேசிய பிரவீண்குமார்,

ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது. இந்த பகுதியில் வருபவர்கள் அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அடையாள அட்டை இல்லாவிட்டால் 100 மீட்டருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

2வது அடுக்கில் நிற்கும் பாதுகாப்பு படையினர் வாக்குப்பதிவு மையங்களுக்கு வருபவர்களை சோதனையிடுவார்கள். செல்போன், சாப்பாட்டு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் எதுவும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதல் முறையாக வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்படும் மீடியா சென்டர்களில் மட்டும் செல்போன் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைக்குள் தேர்தல் பார்வையாளரை தவிர வேறு யாருக்கும் செல்போன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.

வாக்கு எண்ணும் அறைக்கு வெளியேயும், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்கு எண்ணும் இடங்களில் 8 முதல் 14 மேஜைகள் போடப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்குப்பதிவு கண்காணிப்பாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடுவர்.

ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்சார தடை ஏற்படக்கூடாது என்று மின்வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். முன் ஏற்பாடாக ஜெனரேட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

கேள்வி: தேர்தல் ஆணையம் வரம்பு மீறி செயல்படுவதாகவும், கடிவாளம் போடவேண்டும் என்றும் கூறுகிறார்களே?

பதில்: தேர்தல் விதிமுறை எல்லா மாநிலத்திற்கும் ஒன்றுதான். போஸ்டர் ஓட்டுவது, சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் 1959வது ஆண்டின் சட்டப்படி தடை உள்ளது. அதைதான் நாங்கள் அமல்படுத்தினோம். புதிதாக எதையும் செய்யவில்லை.

கேள்வி: தேர்தல் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?

பதில்: மொத்தம் 52,000 வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் பதிவாகி உள்ளன. இதில் 1,800 வழக்குகள் பண பரிவர்த்தனை தொடர்பானது. அனைத்து வழக்குகளிலும் வரும் 12ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி கலெக்டர் மற்றும் எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 70 முதல் 80 சதவீதம் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர்.

கேள்வி: வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டும் உரிமை கோராத பணம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: பறிமுதல் செய்யப்பட்ட பணங்களில் 2 வகை உள்ளது. ஒன்று அரசியல் தொடர்பானது. அதாவது ஓட்டுக்காக பணம் கொடுக்க எடுத்துச் சென்றது. அதுபற்றி விசாரித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும். கோர்ட்டு உத்தரவுப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னொன்று தேர்தலுக்கு தொடர்பில்லாத பணம். அதாவது பணத்திற்கான உரிய காரணம் சொல்ல முடியாமல் இருப்பது. இந்த பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆவணங்கள் சரியாக இருந்தால் அவர்களிடமே பணம் திருப்பி தரப்படும் என்றார்.

No comments:

print