Wednesday, May 18, 2011

டில்லியில் முதல்வர் ஜெ.,வுக்கு காத்திருக்கும் பிரமாண்ட வரவேற்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காக, டில்லிக்கு ஜெயலலிதா எப்போது வருகை தரவுள்ளார் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக பிரமாண்டமான வெற்றியை அ.தி.மு.க., பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று சென்னையில், முதன்முறையாக அவரது அமைச்சரவையின் முதல் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. வழக்கமான சம்பிரதாயங்களையும், அதிரடிகளையும் முடித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, எப்போது டில்லி வருவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் சம்பிரதாய முறைப்படி டில்லிக்கு வந்து, பிரதமர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பூங்கொத்து அளித்து மரியாதை நிமித்தமான சந்திப்பு நடப்பது வழக்கம். இம்முறை சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றவுடனேயே தாமதமே இல்லாமல், டில்லியில் உள்ள தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கூட வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா, தானே நேரடியாக, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த வாழ்த்து தான், மிகப்பெரிய செய்தியாக ஆனது. பிரதமரின் அழைப்பு என்பது வழக்கமான ஒன்று. ஆனால், சோனியாவின் அழைப்பு என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. தவிர, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் இம்முறை ஜெயலலிதா சந்திக்கவுள்ளதால், அந்த சந்திப்பும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

மூன்றாவது அணியில் ஜெயலலிதாவும் இயங்கிய போது பிரகாஷ் கராத், தேவகவுடா, முலாயம் சிங், ஓம்பிரகாஷ் சவுதாலா, அமர்சிங் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, டில்லியில் தங்கியிருக்கும் போது இந்த தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பர். இந்த சூழ்நிலையில் தான், முதல்வர் ஜெயலலிதா எப்போது டில்லிக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. அ.தி.மு.க., வெற்றிச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே, டில்லி தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதி படங்கள் மாயமாகி, ஜெயலலிதா படங்கள் தொங்க ஆரம்பித்தன. ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காக தமிழ்நாடு இல்லத்தில் தங்கி, வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழியும் தனது ஜாகையை மாற்றிக் கொண்டு, எம்.பி., இல்லத்திற்கு சென்றுவிட்டார். அவருக்கு உறுதுணையாகவே எப்போதும் அவருடன் வலம் வந்து, உதவிகள் செய்தபடி காணப்பட்ட ஒரு சில தமிழக அரசு ஊழியர்களையும் கனிமொழியுடன் காண முடிவதில்லை. அவர்கள் மாயமாய் மறைந்து போனதில் இருந்தே, டில்லி தமிழ்நாடு வட்டாரங்களில் அ.தி.மு.க., பெற்ற வெற்றியும், முதல்வராக ஜெயலலிதா ஆனதும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் இருப்பதை காண முடிகிறது. டில்லிக்கு வரும் ஜெயலலிதா இம்முறை எங்கு தங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் தேர்தல் ஆணைய கொண்டாட்ட நிகழ்ச்சி போன்றவற்றிற்கு டில்லிக்கு வந்திருந்த ஒரு சில நேரங்களில், வசந்த்குஞ்ச் என்ற இடத்தில் உள்ள சொந்த பங்களாவிற்கு சென்று தங்கினார். ஆனால் இம்முறை, முதல்வராகவே அவர் டில்லிக்கு வரவுள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால், தமிழ்நாடு இல்லத்தில் தான் பொதுவாக தமிழக முதல்வர்கள் வரும் போது தங்குவதுண்டு.

புதிய தமிழ்நாடு இல்லத்தை முன்பு முதல்வராக இருந்த சமயத்தில் ஜெயலலிதா தான் திறந்து வைத்தார்.எனவே, தமிழ்நாடு இல்லத்தில் தான் முதல்வர் தங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த தேதியில் டில்லிக்கு முதல்வர் வருகிறார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரதமர் உட்பட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு போன்றவை குறித்து அதிகாரிகள் அளவில் ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடந்துள்ளதாக தெரிகிறது. முதல்வரின் டில்லி பயணம் உடனடியாக இருக்காது என்றும், அனேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்திலோ அல்லது அதற்கு பின்போ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. திட்ட கமிஷன் உட்பட அரசுத் துறை சம்பந்தமான சில பணிகளும், முதல்வரின் டில்லி பயணத்தின் போது இடம்பெறலாம் என்றும் தெரிகிறது. டில்லி வரும் ஜெயலலிதாவுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் டில்லி மாநில அ.தி.மு.க., வினர் தயாராகி வருகின்றனர். டில்லி மாநில அ.தி.மு.க., எண்ணற்ற உறுப்பினர்களை கொண்டு இயங்கக் கூடிய, எப்போதுமே சுறுசுறுப்புடன் இயங்கி வரும் கிளை. அ.தி.மு.க., தலைமை கழகம் அறிவிக்கும் சாதாரண நிகழ்ச்சிகள் போராட்டங்களைக் கூட தவறவிடாமல் டில்லியிலும் நடத்துவது வழக்கம். ஓட்டு எண்ணிக்கை நாளன்றுகூட, பொதுமக்களுக்கு லட்டுகளை வாரி வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். எனவே, இம்முறை தங்களது தலைவியான ஜெயலலிதா முதல்வராகவே டில்லிக்கு வரவுள்ளதால், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அசத்தவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

No comments:

print