Wednesday, May 18, 2011

புதிய தலைமைச் செயலகம்: இடம் மாறியது செம்மொழி நூலகம்

சென்னை: புதிய தலைமை செயலகத்திலிருந்த அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள், 80 சதவீதத்துக்கு மேல் கோட்டைக்கு மாற்றப்பட்டு விட்டன.

மீதமிருக்கும் அலுவலகங்களை மாற்றும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள், அனைத்து அலுவலகங்களையும் முழுமையாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில், இடமாற்றும் பணிகளை செய்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் வழக்கம்போல் நடக்கிறது. பி.வி.ஜி., என்ற தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறை ஒப்படைத்துள்ளது. அதன் ஊழியர்கள் இயல்பாக தங்களது வேலைகளைச் செய்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகத்தில் மீதியிருக்கும் கட்டுமானப் பணிகளும், அதையொட்டி நடந்து வரும் பிற கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து, ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, "எங்களது வேலைகளைச் செய்து வருகிறோம். இதுவரை பணியை நிறுத்துங்கள் என்று எவ்வித உத்தரவும் எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. அப்படி பணிகளை நிறுத்த வேண்டுமென்றால், அதற்கான, உத்தரவு வெளிவரும்' என கூறினர். புதிய கட்டடத்தின் கீழ் தளத்தில், சட்டசபையில் எம்.எல்.ஏ.,கள் மற்றும் அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலகத்தின் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில், இருக்கைகளை பழுதுபார்த்து, அதற்கு வண்ணமிட்டு வருகின்றனர். கோட்டையில் அமையவிருக்கும் புதிய சட்டசபை கூட்ட அரங்கிற்கு, இந்த இருக்கைகள் கொண்டு செல்லப்பட உள்ளன.

செம்மொழி நூலகம்: கோட்டையில் இருந்த செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. தரைத்தளப் பகுதியில் அனைத்துப் பொருள்களும் வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து அங்கிருந்த ஊழியரிடம் கேட்டபோது, "நூல்கள், ரேக்குகள் மற்றும் இதர சாமான்களை இங்கு வைக்கச் சொல்லியுள்ளனர். வேறு இடம் ஒதுக்கப்படுமா? எனத் தெரியவில்லை. நூலகத்தை இயக்கும்படியும் கூறவில்லை' என்றார். புதிய கட்டடத்தில் உள்ள தகவல் மையம் (என்.ஐ.சி.,) மட்டும் செயல்பட்டு வருகிறது. "மையத்தை இடமாற்றம் செய்யும்படி எவ்வித உத்தரவும் வரவில்லை' என அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் குவிகின்றனர்: புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பார்க்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் வருபவர்கள் 6 மாடிக் கட்டடத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர். காலி செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை பார்வையிட்டு வருகின்றனர். அங்கிருக்கும் கூட்ட அரங்கு, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை என ஒவ்வொரு பகுதியாகச் சென்று பார்க்கின்றனர். 6வது மாடியிலிருந்து நகர்ப்பகுதியையும், போக்குவரத்தையும் ரசிக்கின்றனர். பலர் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

களைகட்டிய எம்.எல்.ஏ., விடுதி: புதிதாக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.,களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., விடுதி களைகட்டியுள்ளது. நேற்று மாலை வரை ஏறக்குறைய 160-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குரிய சாவியைப் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே இருந்தவர்கள் அனைவரும் திங்கள்கிழமை இரவே அறைகளை காலி செய்துவிட்டனர். புதிதாக ஒதுக்கீடு பெற்றவர்கள் அறைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் புதிய எம்.எல்.ஏ.,கள் குடியேறிவிடுவர். எம்.எல்.ஏ., விடுதியில் இருக்கும் உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே, "மெனு' தயார் செய்யப்படுகிறது. புதிய எம்.எல்.ஏ.,க்கள் வந்த வண்ணம் இருப்பதால், இரவைத் தாண்டியும் உணவு கிடைக்கிறது. இங்குள்ள சலூனில் கூட கூட்டம் அலைமோதுகிறது.

No comments:

print