Sunday, May 8, 2011

2 ஜி வழக்கு: கனிமொழி கைது இல்லை... தீர்ப்பு மே 14க்கு ஒத்திவைப்பு!!

டெல்லி: 2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2ஜி முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புதுறை அமைச்சர் ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்றும் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வாதாடினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் ஆஜராகி வாதாடினார்.

இன்றும் விசாரணை தொடர்ந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித், கலைஞர் டிவியி்ன் மூளையாக கனிமொழி செயல்பட்டார் என்றும், 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு கைமாறிய ரூ.214 கோடி உள்பட அனைத்து பண விவகாரங்களும் அவருக்குத் தெரியும் என்றும் கூறினார்.

2ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளதென்று அவர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் மே 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதன் மூலம் கனிமொழி இப்போதைக்கு கைதாக மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு இது தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது.
 
அதே நேரத்தில் 14ம் தேதி வரை கனிமொழியும் சரத்குமாரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் மே 13ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அடுத்த நாள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்ற சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

No comments:

print