Thursday, May 19, 2011

நம்பவைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி : முதல்வர் ஜெயலலிதா

சென்னை: ‘நம்பவைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி’ என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: தனித்தே ஆட்சி என்று தன்னிச்சையாக புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி அறிவித்திருக்கிறார். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.  நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரியில் நான் பிரசாரம் செய்தேன்.

அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்கவிருந்த என். ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட என்.ரங்கசாமிக்கு மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் என்.ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள என்.ரங்கசாமி, மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வரின் ஏமாற்று நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக புதுச்சேரியில் செயல்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

print