Saturday, May 14, 2011

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார்.

'ரிசல்டுக்குப் பிறகு எல்லாமே மாறும், அப்போது பேசிக்கிறேன்' என்று கூறினார், ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதிமுக அபார மெஜாரிட்டியுடன் ஆட்சியப்பிடிக்கப் போகிறது. வடிவேலுவால் விமரிசிக்கப்பட்ட விஜயகாந்த் 25 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கிறார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரச்சாரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்கள், சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே அவரது வீட்டுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீடடைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

No comments:

print