Sunday, May 15, 2011

தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது

சென்னை: அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் புதிய கட்டடத்திற்கு மாறிய தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே இடம் பெயருகிறது. மேலும் தலைமைச் செயலகமும் பழைய கட்டடத்திற்கே இடம் மாறுகிறது.

புதிய கட்டடத்திற்கு தமிழக சட்டசபையை திமுக அரசு மாற்றியதை அப்போதே கண்டித்திருந்தார் ஜெயலலிதா. அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் கோட்டையில்தான் ஆட்சி அமைப்பேன், அங்குதான் சட்டசபை செயல்படும் எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதால், தலைமைச் செயலகமும், சட்டசபையும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே செல்கிறது.

இதையடுத்து தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் திமுக அரசால் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமாக மாற்றப்பட்ட சட்டசபை வளாகம் காலி செய்யப்படுகிறது. அங்குள்ள நூலகமும் மாற்றப்படுகிறது. அந்த இடத்தில் மீண்டும் சட்டசபை செயல்படும் என்று தெரிகிறது.

அதேபோல முதல்வர் அறை, அமைச்சர்கள் அறைகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படுகின்றன. பர்னிச்சர்கள் மாற்றப்படுகின்றன. ஏசிகள் மாற்றப்படுகின்றன. புதுப்பித்தல் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக் கட்டடம் என்னவாகப் போகிறது என்பது தெரியவில்லை.

No comments:

print