Sunday, March 27, 2011

வாக்காளர்களுக்குப் பிரியாணி உள்ளிட்டவற்றைக் கொடுத்தால் பொறுக்க முடியாது-குரேஷி

Qureshiகொல்கத்தா: சமீபத்தில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட கோழிகளை பறிமுதல் செய்துள்ளனர் அதிகாரிகள். இதுபோல வாக்காளர்களை மயக்கும் செயல்களில் ஈடுபடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.


கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வாக்காளர்களைக் கவருவதற்காக பல்வேறு உபாயங்களை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் கையாளுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது.

சமீபத்தில் தமிழகத்தில் ஒரு வேட்பாளரால் வாக்காளர்களுக்கு பிரியாணி தயாரிப்பதற்காக, கோழிகளை கொண்டு சென்ற வாகனத்தை அதிகாரிகள் பிடித்து மடக்கி பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

இலவசத் திட்டங்கள் கவலை தருகின்றன

அதேபோல தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சரமாரியாக இலவசத் திட்டங்களை அறிவித்து வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கவலையுடன் கவனித்து வருகிறோம்.

மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் தருவோம் என்று கூறுவது வாக்காளர்களைக் கவரும் முயற்சியேயாகும். இது கவலை அளிக்கிறது. இதுகுறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இருப்பினும் இதுபோன்ற இலவசத் திட்டங்களை வழங்குவது குறித்து தேர்தல் அறிக்கைகள் மூலம் அரசியல் கட்சிகள் அறிவிக்கும்போது அதைத் தடுப்பதற்கான அதிகாரம் எங்களிடம் அவ்வளவாக இல்லை. எனவேதான் நாங்கள் வேட்பாளர்களின் செலவு உள்ளிட்டவற்றில் எங்களது முழு அதிகாரத்தை பயன்படுத்தி செயல்பட முனைகிறோம் என்றார் அவர்.

No comments:

print