Monday, March 28, 2011

கூட்டணியை பிரிக்க சதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: ""கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

No comments:

print