Tuesday, February 15, 2011

நாட்டை கொள்ளை அடிக்க அரசே காரணமாக இருக்கிறது: பிரதமர் மீது பா.ஜ., ‌‌நேரடி தாக்குதல்

புதுடில்லி: நாட்டில் எழுந்துள்ள ஸ்பெக்ட்ரம், மற்றும் எஸ். பாண்ட் விவகாரத்தில் ஊழல் மலிந்து விட்டதற்கு பிரதமரே காரணம். இவரே பதில் சொல்லியாக வேண்டும் என்றும் இந்த நாட்டில் இது போன்ற சர்ச்சையி்ல் சிக்கிய முதல் பிரதமர் மன்மோகன் சிங் தான் என கோல்கட்டாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ‌கூறினார். பார்லி., கூட்டுக்குழு விசாரணை மட்டும் போதாது என்றும் , ராஜாவின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


பா.ஜ., ஆலோசனை கூட்டம்: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது, மத்திய அரசின் ஊழல் விவகாரத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட விவகாரம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் , பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டம் கோல்கட்டாவில் துவங்கியுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற அத்வானி பேசுகையில், நாட்டில் ஊழல் மலி்ந்து விட்டதற்கு பிரதமரே காரணம் என்றார். ‌நாட்டை கொள்ளையடிக்க அரசாங்கமே துணை போயிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் மட்டும் பார்லி., கூட்டுக்குழு விசாரணை கேட்கவில்லை. எல்லா ஊழல் வழக்கிலும் பார்லி., கூட்டு விசாரணை தேவை. விண்வெளியில் எஸ்.பாண்ட் ஊழல் குறித்து காங்கிரசால் எவ்வித உரி‌ய பதிலையும் தரமுடியவில்லை என்றார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் :கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு பணிக்கூட நடக்காமல் எதிர்கட்சிகளால் முடங்கியது. இதனையடுத்து இனி நடக்கவிருக்கும பாலி,. பட்ஜெட்கூட்டத் தொட‌ரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ஜனாதிபதியின் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

வரும் 21 ம் தேதி ஜனாதிபதி உரையுடன் பார்லி., கூட்டத்தொடர் துவங்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு ( 1. 76 லட்சம் கோடி இழப்பு) , விண்வெளி கழகத்தின் எஸ்.பாண்ட் ( 2 லட்சம் கோடி இழப்பு) , தாமஸ் விவகாரம், காமன்வெல்த் மற்றும் தேசிய விளையாட்டு போட்டி ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிட பா.ஜ., சமாஜ்வாடி, இடதுசாரி கட்சியினர் எழுப்பவுள்ளனர். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் விடாப்பிடியாக உள்ளனர்.

ஜே.பி.சி.,க்கு தலையாட்டும்: இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து வரும் பார்லி., கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய பரிசீலித்து வருகிறது பொதுக்கணக்கு குழு. துவங்கவிருக்கும் கூட்டத்தொடரில் அமளி, ஏற்பட்டு மீண்டும் அவை முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதால் நாட்டின் வளர்ச்சிப்பணிகள் எதுவும் செயல்படுத்த முடியாத நிலையில் மத்திய அரசு தவித்து வருகிறது.

இதனை எப்படி சமாளிப்பது என ஆலோசிக்கும் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று மூத்த அமைச்சர்கள் பங்கேற்று விவாதித்தனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி பார்லி., கூட்டுக்குழு ( ஜே.பி.சி.,)க்கு தலையாட்டும் என டில்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நிருபர்களை சந்திக்கிறார் பிரதமர்: நாட்டில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைள் மற்றும் இன்னும் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்ககள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கிட மாஸ் பிரஸ்மீட் வைக்கிறார் பிரதமர். நாளை நிருபர்கள் கூட்டம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

No comments:

print