Thursday, February 17, 2011

ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல் : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மவுனம் கலைந்தது

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லிமென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார்.




தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராஜாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து வந்திருந்த புகார்களை மையமாக வைத்து, சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். சட்ட ரீதியிலும், சரியான முறையிலும் வெளிப்படையாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்று இருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராஜாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையான முறையிலேயே நடப்பதாகவும், எந்தத் தவறுக்கும் இடம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், "டிராய் அமைப்பும், தொலைத்தொடர்பு கமிஷனும், ஏலமுறையை பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. ஏல முறையை பின்பற்றினால், ஏற்கனவே உள்ளவர்கள் மட்டுமே வர முடியும், புதிய ஆட்கள் வர முடியாது. கடந்த காலங்களில் ஏலம் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை ஏலம் விடப்பட்டால், அது அனைவரையும் சமமாக நடத்தப்படவில்லை என்பது போலாகிவிடும். நிதியமைச்சகமும், தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஏலமுறை வேண்டாம் என்பதை ஒப்புக் கொண்டன. எனவே, ஏலமுறையை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது' என்றும், ராஜா கூறியிருந்தார். இதனால்தான், அந்த சமயத்தில் நான் மறுபடியும் அந்த விவகாரத்தில் தலையிட முடியவில்லை.

சில நிறுவனங்கள் மட்டும் பலன் பெறும் வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்நோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே இருந்த கொள்கை முடிவையே தானும் தொடர்வதாக ராஜா கூறினார். மற்றபடி ஸ்பெக்ட்ரத்தை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தோ அல்லது முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்திய விதம் பற்றியே, என்னிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ, ராஜா எந்தவொரு ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த முடிவுகள் அனைத்துக்குமே ராஜாவே பொறுப்பு.தவிர, உரிமங்கள் பெற்ற இரண்டு நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கும் வகையில், தங்களது நிறுவன பங்குகளை விற்றுள்ளன. ஒரு நிறுவனம், தனது நிறுவன லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை அது. அந்த நிறுவனங்களின் விருப்பம் அது. இது போன்ற விஷயங்களில் எல்லாம் நான் தலையிட இயலாது.

கூட்டணி அரசு: கூட்டணி அரசு என்று வரும்போது, ஒரு சில சமரசங்களும் உடன் வருவது இயல்பே. யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் நான் சில கருத்துக்களை கூறலாமே தவிர, இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணிக் கட்சி தலைவரே. அந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது. அதில் தவறேதும் இல்லை. தி.மு.க., தரப்பில் எனக்கு அளிக்கப்பட்டது ராஜாவின் பெயர்தான். 2009 மே மாதம் இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் நேரத்தில், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சில புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் மிகவும் வலுவானதாக இருப்பதாக எனக்கு தென்படவில்லை. எனவேதான் ராஜாவின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் எனது மனதை தயார் செய்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டேன். ராஜாவை மீண்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கினேன்.ஸ்பெக்ட்ரம் உட்பட எந்த பிரச்னைகள் குறித்தும் விளக்கமான பதில்களை அளிக்க தயாராக உள்ளேன்.

சீசரின் மனைவியைப் போல, பிரதமர் என்ற பதவியில் உள்ள நானும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவே ஆசைப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்குழு விசாரணை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்தான் அக்குழுவின் தலைவராக உள்ளார். அந்த குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என, ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டேன். பொதுக்கணக்கு குழு என்றுதான் இல்லை. ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு உட்பட எந்த குழு முன்னரும் ஆஜராக தயார். இவ்விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

மேலும் நாட்டின் மொத்த வளர்ச்சி, ஊழலை மட்டும் பெரிது படுத்தி நாட்டின் கவுரவத்தை குலைக்காமல், மற்ற சாதக விஷயங்களையும், "மீடியா' வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மொத்தம் 70 நிமிடங்கள் நடந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும் மூன்றரை ஆண்டுகளுக்கு கூட்டணி அரசு தொடரும் என்ற அவர், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

அமைச்சரவை மாற்றம் எப்போது?பிரதமர் மன்மோகன் சிங் தன் பேட்டியின் போது கூறிய மேலும் பல முக்கிய விஷயங்கள் விவரம் வருமாறு:

* அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

* "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மோசடி, ஐ.எஸ்.ஆர்.ஓ., ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் என, அனைத்து ஊழல்களிலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர்.

* எனது அரசு இயலாத அரசு அல்ல, அதே போல், நானும் இயலாத பிரதமர் அல்ல. அரசை நடத்திச் செல்வதில் சில பலவீனங்கள் உள்ளன. அரசாட்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

* நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை எனக் கூறவில்லை. ஆனால், எல்லாரும் வர்ணிப்பது போல, நான் ஒன்றும் பெரிய குற்றவாளியும் அல்ல.

* கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்ட போது, என்ன நிகழ்ந்தது என்பதை நான் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் கூட்டணி அரசை நடத்துகிறோம். கூட்டணி அரசில், நாங்கள் சில யோசனைகளை மட்டுமே கூற முடியும். ஆனால், யார் அமைச்சராக வேண்டியது என்பதை கூட்டணி கட்சியின் தலைவர்தான் முடிவு செய்வார்.

* பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்.

* உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே. இருந்தாலும், அவர்களை காப்பாற்ற நாங்கள் முற்பட்டுள்ளோம்.

No comments:

print