Sunday, March 27, 2011

கடலூர் தொகுதிக்கு தனி கவனம்:தி.மு.க, தலைமை அதிரடி முடிவு

கடலூர்:கடலூர் சட்டசபை தொகுதி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த, தி.மு.க., தலைமை தனிக் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. கடலூர் தொகுதியில் தி.மு.க., சார்பில், போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ., அய்யப்பன் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் தான் வேட்பாளர் எனக் கூறப்பட்டதால், அவரும் தேர்தல் பணிகளை துவங்கினார்.இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியை வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது. அதிருப்தி அடைந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் கடலூரில் உள்ள, கட்சி அலுவலகம் மற்றும் கட்சி கொடிக் கம்பங்களை உடைத்து சேதப்படுத்தினர். வேட்பாளரை மாற்றக்கோரி கட்சி தலைமைக்கு தந்தி அனுப்பினர்.கட்சியின் "மேலிட' செல்வாக்கினால் "சீட்' பெற்ற புகழேந்தி, மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அய்யப்பனை சந்தித்து பேசினார். இருப்பினும் அவரும், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டதால், புகழேந்தி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருடன் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளார்.


தி.மு.க.,வின் கோட்டை எனக் கருதப்படும், கடலூர் தொகுதி உட்கட்சி பூசல் காரணமாக நிலை மாறும் என்பது முதல்வர் குடும்பத்தாரின் நேரடி விசாரணையில் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து கட்சி தலைமை, கடலூர் தொகுதி மீது தனி கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதோடு, அதற்கான பொறுப்புகளை சிலரிடம் ஒப்படைத்துள்ளது. மேலும், இத்தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களை கொண்டு பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். கட்சி தலைமையின் அதிரடி நடவடிக்கையால், கடலூர் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி சற்று தெம்பாக தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார்.

No comments:

print