Sunday, March 27, 2011

விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்

திருச்சி: எதிர்பார்த்ததைப் போலவே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், அதிமுகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதை இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் விஜய்யின் தந்தையும், சங்க நிர்வாகியுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.


காவலன் படம் தொடர்பாக விஜய்க்கு பெரும் நெருக்கடி வந்த சமயத்தில், அதிமுகவிடம் தஞ்சமடைந்தார் விஜய். அவரது சார்பில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதனால் சட்டசபைத் தேர்தலில் விஜய்யும், அவரது தந்தையும் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. மேலும் விஜய் நடத்தி வரும் இயக்கத்திற்கும் ஜெயலலிதா சீட் ஏதும் தரவில்லை. இதனால் பிரசாரத்திற்குச் செல்லாமல் வெறும் வாய்ஸ் மட்டுமே தருவது என விஜய் முடிவு செய்தார். அந்த வாய்ஸையும் கூட இதுவரைக் காணோம்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சி விரைந்தார். ஜெயலலிதாவை இன்று காலை சங்கம் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்து்ப பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் தீவிரமாக இழைப்பார்கள் என்றார்.

பேட்டியின்போது தனது சட்டப்படி குற்றம் திரைப்படத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை சிலர் மேற்கொண்டதாகவும், ஆனால் அந்தத் தடை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரசேகர் தெரிவித்தார்.

விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெருத்தெருவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விஜய்யும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும் கூட பகிரங்கமாக அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து விஜய் அறிக்கை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

No comments:

print