Sunday, March 27, 2011

மக்கள் நன்மைக்கே கூட்டணி: கொளத்தூரில் விஜயகாந்த் பிரசாரம்

சென்னை: "அ.தி.மு.க.,வுடனான கூட்டணி, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக வைத்த கூட்டணி அல்ல; மக்கள் நன்மைக்காக வைத்த கூட்டணி' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.


கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து, திரு.வி.க., நகர் பஸ் நிலையம் அருகில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது பேசியதாவது: சைதை துரைசாமியை இனி, கொளத்தூர் துரைசாமி என்று தான் அழைக்க வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. கருணாநிதி இதுவரை ஒரு ஏழை மாணவனுக்கு உயர் கல்வி கொடுத்திருப்பாரா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கியிருப்பாரா; உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர், உங்கள் பிள்ளைகளின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை நிறைவேற்றுவார். கொளத்தூர் தொகுதி இனி, கல்வியாளர்கள் தொகுதியாக மாறிவிடும் மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது.


அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி கொள்ளை அடித்து வரும் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். பொன்னேரி: தனித் தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார். சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜனப்பசத்திரம் கூட்டுச் சாலையில், திறந்த வேனில் இருந்தபடி, அங்கு கூடியிருந்த மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.


பிரசாரத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க.,வுடனான கூட்டணி, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக வைத்த கூட்டணி இல்லை. மக்கள் நன்மைக்காகவும், ஊழல் ஆட்சியை ஒழிக்கவும் அமைத்த கூட்டணி. என் மானசீகக் குருவான எம்.ஜி.ஆர்., வளர்த்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன். தேர்தல் கமிஷன் ஒரு சாராருக்காக செயல்படுகிறது என்று கூறும் தி.மு.க., தலைவருக்கு, தேர்தல் கமிஷனையே ஆட்டி வைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என்பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமிஷன் உதவியாக இருந்ததா? கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் அரசு, ஒரு இனமே அழிந்த போது, அமைதியாக இருந்தது. தற்போது எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டது. ஊழல் ஆட்சி ஒழிய, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்று பேசினார்.


செங்குன்றம்: பஸ் நிலையம் அருகே மாதவரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வீ.மூர்த்தியை ஆதரித்து அவர் பேசியதாவது: "நான் ஊழலுக்கு நெருப்பு' என, கருணாநிதி கூறுகிறார். ஆனால், அவர் தான் ஒட்டு மொத்த ஊழலுக்கும் பொறுப்பு. அதை பார்த்து தான், அப்போதே, சர்க்காரியா கமிஷன் அவரை, "விஞ்ஞான பூர்வமான ஊழல்வாதி' என்றது. ஊழல் செய்வதில், கருணாநிதி டாக்டராக இருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி ஆகியோர், பதவியில் இருக்கின்றனர். எந்த நாட்டிலும் இது போன்ற அவலம் இருந்ததில்லை. ஐந்து முறை முதல்வராக இருந்த அவர், மக்களுக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை. தன் குடும்பத்தினருக்கு மட்டுமே, கோடி கோடியாக சொத்து சேர்த்துவிட்டார். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

print