Sunday, March 27, 2011

சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் பேத்தி கல்யாணத்திற்கு கமல், ரஜினியை அழைக்கலாமா? -சரத் கேள்வி

Sarath Kumarதென்காசி: சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கிப் பேசினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்காசி சட்டசபை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

நான் வித்தியசமான வேட்பாளர். தென்காசி தொகுதியை வளம் மிகுந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்க முழு முயற்சி எடுப்பேன்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் நான் தொகுதியிலேயே இருந்து மக்கள் பணியாற்றுவேன். நான் மட்டும் தொகுதி மாறி போட்டியிடவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தொகுதி மாறியே போட்டியிடுகின்றனர். அவரவர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என ஜனநாயக நாட்டில் கூற முடியாது. பீட்டர் அல்போன்சும், கருப்பசாமி பாண்டியனும் சொந்த தொகுதியிலேயே போட்டியிடுகின்றனர்.

இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சந்திக்கலாம். வீடியோ கன்பிரன்ஸ் மூலம் சந்தித்து பேசலாம். தென்காசியில் எனக்கு முழு நேர அலுவலகம் செயல்படும். தென்காசி தொகுதியில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த 1996-ம் நடந்த தேர்தலில் என் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து என்னை சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க வந்தார். சினிமாவி்ல் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாதித்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்ய வந்துள்ளேன்.

சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக.

மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனாநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இது பற்றி அவர் என்னுடன் டிவியில் நேருக்கு நேர் மோத தயாரா? அப்போது அறிவாளி யார், மக்களை ஏமாற்றும் பேர்வழி யார், யார் என தெரிந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

print