Wednesday, March 30, 2011

பணத்தால் ஜெயிக்க அதிமுக திட்டம் : முதல்வர் கருணாநிதி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் தோல்வி பயத்தில் ஜெயலலிதா இருக்கிறார்; குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு,  பணத்தால் அடித்து வெற்றி பெற நினைக்கிறார்  என்று முதல்வர் கருணாநிதி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது என்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார் முதல்வர்.  முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தோல்வி பயமும் வெற்றி கை கூடாதோ என்ற சந்தேகமும் அ.தி.மு.க.வுக்கு  ஏற்பட்டு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு காரிலும், வண்டிகளிலும், வேன்களிலும் ஆட்கள் மூலமாகவும் அனுப்பப்படுவதாக நம்பகமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.எப்படியும் இந்த தேர்தலில் என்னையும், பேராசிரியரையும், ஸ்டாலினையும் மற்றும் சில முக்கிய தளபதிகளையும் தோற்கடித்தே தீர வேண்டுமென்று ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு, சேகரித்த பணத்தையெல்லாம் செலவிட துணிந்து விட்டாராம்.

நாட்டில் அரசியல் அமைப்பிலும், மற்ற சகல அமைப்புகளிலும் பறிபோய்விட்ட பதவி அதிகாரத்தை மீண்டும் பற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, ஒரு தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பத்து கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய தயார் என்று அவர்  சவால் விட்டு பணம் ஊர்வலம் நடத்த தயாராகி விட்டார்.
பதுங்கிப் பதுங்கியோ, பலத்த காவலுடனோ தேர்தல் களத்தில் குதித்து ஜனநாயகத்தை விலை பேசிக்கொண்டே பண நாயகத்துக்குப் பகைவர்போல் பாசாங்கு செய்யும் அ.தி.மு.க.வினரை  அடையாளம் காணத் தவறாதீர்கள். அவ்வாறு கார்களிலும், வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது.

வண்டி வாகனங்களில் வருவார்கள், ஒண்டிக்கட்டை போல் திரிவார்கள், ஏழைகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை ஏலம் போட துணிவார்கள். உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருக்கணமும் உறங்காமல் காவல் காத்திட வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகள் ஏமாற்றி விடுவார்கள். மாதக் கணக்கில் விவசாயி உழைத்து, வியர்வையைச் சிந்தி வளர்த்த பயிரின் மொத்த விளைச்சலை இரவோடு இரவாக களவாடிச் சென்றிட எத்தர்கள் முயலுவார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர் புலி வேடம் போடுகிறார், அவர்களின் பொய் வேடத்தைக் கலைத்திட முயலுவதுதான் நம் பணியாக இருக்க வேண்டும். திருவிழா கூட்டத்தில் பணத்தை திருடிக்கொண்டு செல்பவன், துரத்திச் செல்பவர்களோடு தானும் சேர்ந்து ஓடிக் கொண்டே ‘திருடன், திருடன்’ என்று குரல் கொடுப்பதைப் போல நல்லவர்கள் போல மக்களிடம் மீண்டும் நடிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

மக்களின் ஞாபக மறதியை மூலதனமாக வைத்துக் கொண்டு யாரோ எழுதிக் கொடுத்ததை பக்கம் பக்கமாக படித்து விட்டு, பதவியேற்பு எப்போது என்று துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களை நம்பிக் கெட்டோர் நாட்டிலே கண்ணெதிரே இருக்கும்போதே, உண்மை சொரூபத்தைப் புரியாமல் இன்னும் சிலர் உடன் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஐந்தாண்டு காலமாக நாம் சாதனைகளைச் செய்து விட்டுத்தான் தற்போது மக்கள் முன்னால் நிற்கிறோம். ஆனால், அவர்கள் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த தரப்பினரையாவது நிம்மதியாக வாழ விட்டார்களா? அரசு ஊழியர்கள் பட்டபாடு எத்தனை? எஸ்மா, டெஸ்மா சட்டங்களின் மூலமாக அரசு அலுவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட கொடுமைகளையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா? சாட்டையால் அடித்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்திலே அவர்  முழங்கியதுதான் மறக்கக்கூடிய வார்த்தைகளா? ஒன்றிரண்டு பேர் மறந்துவிட்டோ, மீண்டும் தப்பித்தவறி அவர்கள் வந்துவிட்டால் நாம் முந்திக் கொள்ளலாம் என்ற நினைவோடோ பாதை தவறி நடக்க முயற்சிக்கலாம்.  

அவர்கள் வழியில் அவர்கள் செல்லட்டும். நாம் நம் வழியிலே செல்வோம். நாளைய தினம் (30ம் தேதி) என்னுடைய இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குகிறேன். என்னுடைய சுற்றுப்பயணத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப்பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு ஆங்கில நாளிதழ், நான் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்பதாகவும், ஆனால் ஜெயலலிதா,  என்னையும், என் குடும்பத்தினரையும் வேகமாக தாக்கிப் பேசுவதாகவும் எழுதியுள்ளது. அவர்களுக்கு நம்மை தாக்கிப் பேசுவதைவிட வேறு செய்திகள் பேசுவதற்கு இல்லை என்கிறபோது என்ன செய்வார்கள்? அவர்கள் தாக்கிப் பேசிட, பேசிட அவர்களைப் பற்றி மக்களே நன்கு உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் எப்படியும் வெற்றி பெற முடியாத நிலையில்தானே, குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு பணத்தை அடித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். அந்த நினைப்புக்கு இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டியது முக்கியம். நாம் நம் வழி ஜனநாயக வழியில் நடப்போம். அவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பணநாயக வழியில் நடக்கட்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

print