Thursday, March 31, 2011

சட்டசபை தேர்தல்: விளவங்கோடு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வேட்பு மனு வாபஸ்

நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த விளவங்கோடு எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.


குமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருவட்டார் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி தனக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த தற்போதைய விளவங்கோடு எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதற்காக அவர் கடந்த 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடுவது ஏன் எனவும் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற் குழு கூடி ஜான் ஜோசப்பை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவது என முடிவெடுத்து அறிவித்தது.

இந்நிலையில் விளவங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஜான்ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னை முன் மொழிந்த ஒருவர் மூலம் அதற்கான கடிதத்தை விளவங்கோடு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். இதனால் அத்தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குறித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

No comments:

print