Friday, April 15, 2011

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.


தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

No comments:

print