Wednesday, April 6, 2011

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கருணாநிதியுடனான தர்மயுத்தத்தை ஜெ. முடித்து வைப்பார்-பண்ருட்டி

கோவை: அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு எதிராக தொடங்கிய தர்மயுத்தத்தை, இன்று அந்த யுத்தத்தை ஜெயலலிதா முடித்து வைப்பார் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


கோவையில் இன்று நடந்த அதிமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்று தொடங்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இன்றைய கூட்டத்தில் தேமுதிக தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன், கலந்து கொண்டிருக்க வேண்டும். கலந்து கொள்வதாகத்தான் அவரும் இருந்தார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதை பெரிதாக இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் திமுககாரரக்ளும், அவர்களது ஊடகங்களும்.

அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன், மாண்புமிகு புரட்சித் தலைவியும், புரட்சிக் கலைஞர் கேப்டனையும் ஒரு சேரக் காண வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், மே 13ம் தேதி வரை காத்திருங்கள். முதல்வராக புரட்சித் தலைவியையும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக புரட்சிக் கலைஞர் கேப்டனையும் நீங்கள் சட்டசபையில் பார்க்கலாம்.

இவர்கள் எதிர்பார்த்ததைப் போல கேப்டன் புறக்கணிக்கவில்லை. காரைக்கால், நாகப்பட்டனத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள். அங்கு நிற்பது தேமுதிக வேட்பாளர்கள் அல்ல, அதிமுக வேட்பாளர்கள், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள். இவர் வருவார் என்று ஏராளமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு காத்திருக்கிற நிகழ்ச்சி. அங்கிருந்து வருவதற்கும் வெகு தூரம். ரத்து செய்வதும் இயலாத நிலை.

அதிமுக-தேமுதிக கூட்டணி அமையக் கூடாது என்பதற்காக கருணாநிதி செய்த சதிகள் ஏராளம். ஆனால் அதைத் தாண்டி இன்று வலுவான கூட்டணியாக இது உருவெடுத்திருக்கிறது.

இங்கு பேசியவர்கள் எல்லாம் அலை அலை என்றார்கள். ஆனால் எனது காதில் அது இலை, இலை என்றுதான் விழுந்தது.

வட சென்னை முதல் தென் குமரி வரை மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர். கருணாநிதி ஆட்சியை கூண்டோடு அகற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு ஆயுதம் தேவைப்படுகிறது. அந்த ஆயுதத்தைதான் புரட்சித் தலைவியும், புரட்சிக் கலைஞர் கேப்டனும் மக்களுக்கு்க கொடுக்க இந்த கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

காமராஜரை நினைத்தால் கல்வி நினைவுக்கு வரும். அண்ணாவை நினைத்தால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது நினைவுக்கு வரும். கருணாநிதியை நினைத்தால் ஊழல்தான் நினைவுக்கு வருகிறது.

கருணாநிதிக்கு எதிரான தர்மயுத்தத்தை அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். இன்று அந்த தர்மயுத்தத்தை புரட்சித் தலைவி ஜெயலலிதா முடித்து வைத்தார் என்று நாளைய வரலாறு கூறும். அதற்கு தேமுதிக என்றென்றும் துணை நிற்கும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

No comments:

print