Saturday, April 9, 2011

தேர்தலுக்கு பின் சோனியா-விஜய்காந்த்-ராமதாஸ் கூட்டணி அமையும்: சு.சாமி

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.


நிருபர்களிடம் அவர் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையே திமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமையும். கிராமப்புறங்களில் மக்களை பிரச்சாரத்தின்போது சந்தித்தபோது, திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசியதைக் காண முடிந்தது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வரும் 18ம் தேதி நடக்கிறது. அப்போது வழக்கை விரைவுபடுத்தக் கோர உள்ளேன். மேலும், ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர்கள் 2 பேர் இறந்தது தொடர்பான வழக்கையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குடன் சேர்த்து நடத்தவும் மனு செய்வேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்னும் சில நாள்களில் மற்றொரு குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யும். அதில் கனிமொழியின் பெயரும் இடம் பெறலாம்.

ஊழல் பிரச்சனை உள்ளிட்ட பல பிரசச்னைகள் எழுந்துள்ளதால், வரும் நவம்பரில் மக்களவைத் தேர்தல் வரலாம். தமிழக தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவுடன் விஜயகாந்த், ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து புதிய கூட்டணியை அமைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில், கல்லூரியைச் செயல்பட வைக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். பேராயர் தானாகவே சென்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். ஆனால், அவரது மகன் தலைமையில் பாதிரியார்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இரட்டை வேடம் போட்டு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்திருப்பது சரியல்ல என்றார்.

No comments:

print