Saturday, April 9, 2011

எந்த வசதியும் இல்லாததால்தான் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்தேன்! - விஜயகாந்த்

ரிஷிவந்தியம்: எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊர் என்பதால்தான் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்து நிற்கிறேன், பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் திமுகவிடமே அதைப் பெற்றிருப்பேனே, என்றார் விஜயகாந்த்.


அதிமுக கூட்டணியில் இணைந்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் போட்டியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து வந்த விஜயகாந்த் இன்று ரிஷிவந்தியம் பகண்டை கூட்டு ரோட்டில் தனக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், "காந்தி கண்ட கிராமம் காந்தி கண்ட கிராமம் என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். இதுதான் காந்தி கண்ட கிராமமா? காந்திகண்ட கிராமம் என்றால் என்னவென்று தெரியுமா காங்கிரஸ்காரர்களுக்கு.

தீயணைப்பு நிலையம் கிடையாது; ரிஜிஸ்தர் ஆபீஸ் கிடையாடு. குண்டும் குழியுமான சாலைகள். விவசாயத்துக்கு இடுபொருள் வேண்டும் என்றால் திருக்கோவிலூர் செல்லவேண்டும். மருத்துவமனை என்றால் விழுப்புரம்தான் செல்ல வேண்டும்.

இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாமல் இருக்கிறது ரிஷிவந்தியம். இதனால்தான் நான் ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தேன்.

பூனையை யானை ஆக்குவேன் என்று மற்றவர்கள் மாதிரி பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். 3 வருடத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். இது என்னால் முடியும்.

எனக்கு தொகுதிக்கு ஒதுக்கும் நிதியில் 5 பைசா கூட எனக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி நான் பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் திமுக என்னிடம் பேரம்பேசியபோதே சம்மதம் தெரிவித்து பணத்தைப் பெற்றிருப்பேன்.

என் மானசீக குரு எம்.ஜி.ஆரின் நல்லாசியுடன் கூட்டு ரோடில் இருந்து கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லோரும் கூட்டாக இருந்து கிராமத்தை உயர்த்துவோம்," என்றார்.

தமிழகத்தை விற்றுவிடுவார்கள்...

பின்னர் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். ராமமூர்த்தி ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசார வேனில் இருந்தபடி அவர் பேசியது:

விழுப்புரத்தில் பொன்முடி ஒரு குட்டி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார். தெய்வசிகாமணி என்ற அவர் 1989-ல் வாத்தியாராக இருந்தவர். இன்று இந்தளவுக்கு சொத்து குவித்திருக்கிறார். அவர்களுக்கு ஓட்டுப் போட்டால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்.

அப்பா முதல்வர் (கருணாநிதி), பிள்ளை துணை முதல்வர் (ஸ்டாலின்), அப்பாவுக்கு 1000 போலீஸ், பிள்ளைக்கு 500 போலீஸ் பாதுகாப்பு. அடுத்த 5 ஆண்டுகள் வீட்டில் உட்காரப் போகிறீர்கள், அப்போது உங்கள் பின்னால் எவ்வளவுபேர் வரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவரது குடும்பமும், அமைச்சர்களும் 30 முதல் 3000 ஏக்கர் வரை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். அதைப் பிரித்து கொடுத்தால் தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் 2 ஏக்கர் நிலம் தந்திருக்கலாம், விலைவாசியை கட்டுப்படுத்தியிருக்கலாம்", என்றார்.

No comments:

print