Monday, April 11, 2011

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

சென்னை: தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


கூட்டணி ஆட்சியில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில்,

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், என்னை திமுக மீண்டும் முதல்வராக தேர்வு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பேன். கூட்டணி ஆட்சியில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப அது அமையும். தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக இருக்கும் என்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டுக்கள் வழங்கப்பட்டதால் திமுக ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகி்றதே என்ற கேள்விக்கு, அதில் உண்மை இருக்கலாம். ஆயினும் அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டது பற்றி எனக்கு எந்தவித வருத்தமோ, ஆட்சேபனையோ கிடையாது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதே என்னுடைய விருப்பம்.

தேர்தல் ஆணையர் குரேஷி ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கைதான் கடைப்பிடித்து வருகிறார். தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளை மீறி அவர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட முயல்கிறார். ஒரு முதலமைச்சர் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்க முடியாதா? இதிலிருந்தே யார் யாருக்கு அவர் சவால் விடுகிறார் என்று தெரியவில்லையா? என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை தாக்கி பேசவே இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, அது அவர்களுடைய பண்பாட்டை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்க நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நான் நெருக்குதல்களுக்கு அடிப்பணிவதில்லை. நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்கிறேன்.

திமுக ஆட்சியின் இலவச திட்டங்கள் எல்லாம் உங்களுடைய குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக தீட்டப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறாரே என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் குடும்பம் மட்டுமா பயன் அடைந்துள்ளது. எங்களுடைய ஒவ்வொரு திட்டத்தாலும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். நான் ஒரு வெற்றிகரமான திரைப்பட வசனக் கர்த்தா என்ற முறையில் நான் ஈட்டிய வருமானத்தை அறப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் வழங்கி இருக்கிறேனே தவிர என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அல்ல என்று கூறி்யுள்ளார் கருணாநிதி.

திருவாரூரில் இன்று கருணாநிதி பிரசாரம்:

இந் நிலையில் தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

திருக்கண்ணமங்கை, மணக்கால் உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி பிரசாரம் செய்தார்.

இன்று மாலை 3.30 மணி அளவில் திருவாரூர் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்துடன் முதல்வர் தன் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

No comments:

print